У вашего броузера проблема в совместимости с HTML5
படுகளம் என்றால் போர்க்களம். களத்தில் துரியோதனனை எதிர்கொண்டு பீமன் வதம் செய்யும் தத்ரூபமான காட்சியே துரியோதனன் படுகளம் என்ற பெயரில் தெருக்கூத்தாக நடித்து காட்டப்படுகிறது. 11 நாட்கள் மகாபாரத இதிகாசம் குறித்த தெருக்கூத்து மற்றும் தொடர் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. இறுதியாக துரியோதனன் படுகளத்துடன் விழா நிறைவடையும். படுகளம் நிகழ்ச்சியில் 1 டன் களிமண்ணை கொண்டு வந்து, சுமார் 10 அடி நீளத்தில் உருவபொம்மை அமைப்பார்கள். துரியோதனனாக சித்தரிக்கப்பட்ட அந்த பொம்மைக்கு பல்வேறு வண்ணங்கள் பூசி கண் திறப்பர். பின்னர், மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை செய்வர்.
அப்போது, பீமன் வேடம் அணிந்து வந்த தெருக்கூத்து கலைஞர் துரியோதனனை படுகளத்தில் எதிர்கொண்டு கதாயுதத்தால் தாக்குவார். அப்போதும் துரியோதனன் மரணம் அடையாததால், உயிர் எங்கே உள்ளது என கேட்பார். அப்போது, தொடையில் உள்ளது என துரியோதனன் கூறுவதாக மற்றொரு தெருக்கூத்து கலைஞர் பதில் சொல்வார். பிறகு ஆவேசமடைந்த பீமன் உருக்கொண்ட கலைஞர், கதாயுதத்தால் துரியோதனன் தொடையில் தாக்குவார். அங்கிருந்து பீறிட்டு எழும் சிவப்பு சாயத்தை ரத்தமாக கருதி, திரௌபதி வேடம் அணிந்திருந்த கலைஞர், தனது தலைமுடியில் பூசிக்கொள்வார். இத்தகைய துரியோதனன் படுகளத்தை துக்க நிகழ்ச்சியாக பாவித்து, பக்தர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு சென்று நீராடுவார்கள்.